புதன், 23 டிசம்பர், 2015

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 4.

உற்று நோக்குகிறேன்
என்னுள் இருந்து 
புலி ஒன்று வெளிவந்து 
வேட்டையாடி
புசிக்க விளைகிறது.
பாம்பு ஒன்று வெளிவந்து 
சுருட்டி மடக்கி விழுங்க துடிக்கிறது.
வீச்சரிவாள் ஒன்று புறப்பட்டு
வெட்டி சாய்க்க விழைகிறது.
துப்பாக்கி வெடித்து கிளம்பி
உயிரை மாய்க்க துடிக்கிறது.
காமுகன் ஒருவன் வெளிவந்து
அங்கும் இங்கும் தேடி திரிகிறான்.
பெண்ணொருவள் வெளிவந்து
அவன் கரம் பற்றி தீ மூட்டுகிறாள்.
எல்லாவற்றையும் கடந்து
மனித மிருகம் ஒன்று வெளிவந்து
அன்பை கொட்டி திரிகிறது.


புதன், 4 நவம்பர், 2015

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 3.

புலியின் மீதேறி கானகத்தில்
வேட்டையாடிக் கொண்டிருந்தபோது
அவளை கண்டேன்
சிங்கத்தின் மீதேறி 
சிங்காரமாய்
ஊர்வலம் போகலாம் என்றாள்
என்னை ஏற்றி கொண்டு
காடு முழுவதும் 
சுற்றி பாய்ந்து திரிந்து
வேட்டையாடினாள்
தீ மூட்டி விலங்குகளை 
புசித்து தின்றாள் 
என்னை புணர்ந்து 
படுத்துறங்கி எழும்பினாள்
நான் சிங்கத்தின் மீது 
அவளுடன் அமர்ந்து 
சிங்கார சவாரி செய்து 
கொண்டிருப்பதை நீங்கள்
நம்பினால் நம்புங்கள்.




வியாழன், 29 அக்டோபர், 2015

தலைபில்லா கவிதைகள். கவிதை. 2.

ஒரு  குளக்கரையில் நின்று 
உற்று நோக்கி கொண்டே இருக்கிறேன்
நீர் வற்றி  தாமரை தலை சாய்த்தது 
மீன்கள்  துடி துடித்து இறந்தன 
பாசிகள் மணல் படிந்து மணலோடு 
மணலாகிறது 
தரை பாள பாளமாய் வெடித்து 
செல்கிறது
எங்கிருந்தாவது நீர் வராதா
தவியாய் தவிக்கிறது குளம்
காய்ந்த மனம் போல .

புதன், 28 அக்டோபர், 2015

தலைப்பில்லா கவிதைகள் . கவிதை.1.

ஒரு கோட்டின் மீது எனது வாழ்க்கை
பயணித்து கொண்டே இருக்கிறது
விழித்திருக்கும் மனம் போல
முடிவில்லா கோடாய் நீண்டு
கொண்டேஇருக்கிறது
எங்கு முடியும் என்று
எனக்கு தெரியவில்லை
யாரேனும் அறிவீர்களா.