வியாழன், 8 நவம்பர், 2018

விஜய் - வீடியோ டெக்

தீபாவளி சிறப்பு கட்டுரை .
90களின் மத்தியில் கிராமங்களில் டெக் வீடியோ காட்சிகள் பிரபலம். கிராமங்களில் இருந்து தியேட்டர் சென்று திரைப்படம் பார்ப்பது குறைந்து கொண்டே வந்த காலகட்டம். டூரிங் டாக்கிஸ் அனைத்தும் மூடப்பட்டு விட்ட காலம். இரவு நேரத்தில் விசேச வீடுகளில் வீடியோ DVD மூலம் படம் போடுவார்கள். எனது நண்பன் தான் எங்கள் ஊரில் முழு பொறுப்பு. நான் அவனுக்கு உதவியாக செல்வதுண்டு. பேருந்தில் ஏற்றி இறக்கி கொண்டு அதை பாதுகாத்து இரவில் தெருக்களில் சினிமா ஓட்ட வேண்டும். ஏன் இத்தனை கஷ்டம். எங்கள் இதர செலவுக்கு உறவுகள் உத்தரவாதம்!
ஒரு இரவு தந்தை இயக்கத்தில் மகன் நடிக்கும் படம். அது அவருடைய இரண்டாவது மூன்றாவது படம் என்று நினைக்கிறேன். அது இரண்டாவது காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது. மொத்தம் நான்கு காட்சிகள் , முதல் காட்சிக்கு அத்தனை கூட்டம் இருக்காது. இரண்டாவது காட்சிக்கு பெண்கள் கூட்டம் அலைமோதும்!!! படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் அந்த காட்சி ஆரம்பிக்கிறது. படத்தின் நாயகன் குளியல் அறையில் உக்கார்ந்து அடுத்த குளியல் அறையில் குளிக்கும் நாயகியின் முதுகில் சோப்பை தேய்க்கிறான். இணைப்பு படத்தை பார்க்கவும். சட்டென்று ஒரு அமைதி அங்கு, என்ன செய்வதென்று எங்களுக்கு தெரியவில்லை. ரீமோட்டை கையில் எடுக்காமல் உட்கார்ந்து விட்டோம். மலையாள படத்தின் காட்சிக்கு எந்த வகையாலும் குறையாத காட்சி அது , அதை இரவு திரையிலுருந்து தெருவுக்கு கொண்டு வந்த பெருமை தமிழ்நாட்டில் அந்த அப்பன் பிள்ளையையும் எங்கள் ஊரில் எங்களையும் சாரும்.
அடுத்தடுத்த காட்சிகளை அப்போது ரீ்மோட்டை கொண்டு ஓட விட்டு அடுத்த நாள் காலையில் அந்த காட்சிகளை பார்த்தது வேறு கதை. இதில் நான்காவது ஐந்தாவது காட்சியில் ஸ்ரீவித்யாவை இயக்குனர் குளிக்க வைத்திருப்பார் . அந்த இயக்குனர் தான் சமூகத்தை தன்னுடைய படங்களில் அதிகம் விமர்சித்திருப்பார், எப்படி இருக்கிறது பாருங்கள் தமிழ் சினிமா இயக்குனர்களின் அக்கறை. அந்த நடிகர் இன்று தமிழ் நாட்டின் இளைய சமூகத்திற்கு தளபதியாம். கீழுள்ள படங்களை காணுங்கள் தமிழன் எந்த நிலையில் அரசியலை முன்னெடுக்கிறான் என்று. தமிழன் ஒரு பொருளாதார அறிவும் நீண்ட கால வளர்ச்சியை முன்னெடுக்கும் தலைவர்களை இந்த நூற்றாண்டிலும் தேடாமல் தன்னுடைய வாழ்க்கையை இவர்களிடம் அடகு வைக்கிறான்.
அந்த நேரத்தில் பாசில், வஸந்த் போன்ற இயக்குனர்கள் இவரின் நடிப்பு வாழ்வில் கை கொடுக்கவில்லையென்றால் அந்த காட்சியை விட சிறப்பான காட்சிகளை அப்பனும் பிள்ளையும் இணைந்து எடுத்து கூட்டத்தை சேர்த்திருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
நம் தலையெழுத்து இவர்கள் கூட நம்மை ஆள வந்து விடுவார்களோ என்று நினைத்து கொண்டே எதையும் செய்யாமல் வாழ்வது தான்.
ஆனந்த் பிரேம்.

வெள்ளி, 8 ஜூன், 2018

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 21.

உருவமற்ற யானை
எங்கள் வீட்டிற்குள் உலவி கொண்டிருக்கிறது.
யார் எப்பொழுது அழைத்து
வந்தார்கள் என்பதறியாது.
ஒவ்வொரு வீட்டையும்
துதிக்கையையும் தந்தங்களையும்
துணைக் கொண்டு ஆட்டுவிக்கிறது.
தன்னை படைத்தவனுக்காக
மனிதன் உருவாக்கி
பாகனிடம் ஒப்படைத்து
அங்குசத்தை பரிசளித்தான்.
அன்பை போதிப்பதாய்
வீட்டிற்க்குள் வந்த யானை
வன்மத்தை தலையில் ஏற்றுகிறது.
மதங்கொண்டு யானை
பிளிரும் போது
மனிதக் குருதி பெருக்கெடுக்கிறது.
அங்குசத்தை அரசர்கள்
கைக்கொண்டு யானையின்
மீதேறி உலா வருகிறார்கள்
யானை மதம் கொண்டு
எங்கள் வீடுகளை துவசம் செய்து
தன் எஜமானின் ஆலயங்களை
தரைமட்டமாக்கி ஆனந்த
தாண்டவமாடுகிறது.





வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

தலைப்பில்லா கவிதைகள் . கவிதை.20.

தொலைந்து போவதற்காக
தேடிப் பிடித்து அடர்ந்த
காட்டிற்குள் நுழைந்தேன்
பாதைகள் உற்பத்தியாகி
பலகைகள் வழிநடத்துகின்றன
என்னை கடந்து
வாகனங்கள் விரைகின்றன
மனிதர்கள் அடையாளம் கண்டு
சிரித்து கடக்கிறார்கள்
அங்கங்கே தண்ணீர் தொட்டியில்
நீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன
கம்பி வலைக்குள் மிருகங்கள்
நடமாடி காட்சியளிக்கின்றன
மலையோடைகளில் இயந்திரங்கள்
மின் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன
மிருகங்களின் தோலாடை
அணிந்த ஒருவன் எதற்காக
வந்தீர்கள் என்றான்.
தொலைந்து போவதற்காக என்றேன்
ஒலியெழுப்பி விட்டு
தவறான பாதையில்
வந்து விட்டீர்கள்
நீங்கள் செல்ல வேண்டிய இடம்
கல் காடுகள் நிறைந்த
நகரம் என்றான்.