சனி, 24 ஜூன், 2017

தலைப்பில்லாக் கவிதைகள். கவிதை 18.

அதிகாலை சூரியன்
மிதிவண்டி
பாதையை இருட்டாக்கும் மரங்கள்
படர்ந்து தலை தொடும் கொடிகள்
வளர்ந்து முறைத்து நிற்கும் செடிகள்
பூக்கள்
பயந்து விலகும் பாம்பொன்று
படபடக்கும்  பறவைகளின் ஓசை
சலசலக்கும் ஓடை
ஒன்றையடி பாதை
கடந்து செல்லும் மஞ்சள் அழகி
அழகாகும் விடுமுறை .


ஞாயிறு, 11 ஜூன், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை.17.

அவள் அவளிடத்தில்
நின்று கொண்டிருந்தாள்
நான் சென்று இணைத்துக் கொண்டேன்
என் வாழ்வை அவளுடன்
ஒன்றைாயொன்று நேரெதிராக
இரட்டை கோடுகளாக உணர்ந்தேன்
தள்ளி வந்து
தன் இசையை கேட்டேன்
தன் நடனத்தை ஆடினேன்
தனக்கான புத்தகங்களை
தேடித் திரிந்தேன்
எனக்கான பயணத்தை பயணித்தேன்
தள்ளி நிற்பது அப்படியொன்றும்
எளிமையாகவும் சுலபமாகவும்
இருக்கவில்லை
அவளை நோக்கி நகர்ந்தேன்
அவள் அவளிடத்தில் தான்
நின்று கொண்டிருந்தாள்
எங்கேயும் நகராமல்.

சனி, 10 ஜூன், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை. 16.

சில கால்கள் அருவருப்பானவை
அவை நம் உடலை கூச செய்பவை
தொட்டுக் கும்பிட்டே ஆக வேண்டிய
கால்கள் காலாச்சார நிழலை
போர்த்தி கொண்டிருப்பவை
எத்தனை உயரத்தில் கால்கள்
இருந்தாலும் தொட்டு விட
துடிக்கும் மனிதர்கள் உண்டு
தொடவே முடியாத கால்கள் உண்டு
நீங்கள் எத்தனை முறை விழுந்து
கும்பிட்டாலும்
சூட்டையும் சேற்றையும்
பொருட்படுத்தாத கால்களை
எவரும் பொருட்டாக கொள்வதில்லை
கால்களுக்கான மரியாதை
அவரவர் தேவைகளுக்கான
வெளிச்சத்தில் தஞ்சம் அடைகிறது
பிண்ணி பிணைந்திருக்கும் கால்கள்
பரவசம் தரக்கூடியவை
உங்கள் முகத்தில் உரசி கொள்ளும்
கால்கள் பரிசுத்தமானவை
விழிக்கும் போது உங்கள்
முகத்தில் கிடந்தாலும்
அவை வளராதவரை .