ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 15.

மலைவாழ் அம்மன்
நாலரை மணிக்கு எழுந்து
நாலு மலை தாண்டி
நாலு மணி நேரம் இலை பறித்தால்
அறுபது பறிப்பு கூலி என்றது
ஆதி தமிழ் அம்மன்
ஒரு நாளு முழுக்க கல்லு சுமந்து
கூரை ஏற்றினால்
நூற்றைம்பது என்றது
வேடர் அம்மன்
மதியம் ஆற்றில் இறங்கி
சாயநேர வரை சேறு தடவி
இராலு பிடித்தால்
அம்பது நூறு கிடைக்கும் என்றது
தோப்பு அம்மன்
ஊற வைத்த வோலையை
நாள் முழுக்க வேய்ந்தால்
நாற்பது என்றது
மீனவ அம்மன்
கூடை மீன் சுமந்து
நாலு ஊரும் நாற்பது தெருவும் கூவினால்
நூறோ நூற்றைம்பதோ
வரும்படி என்றது.
ஏல அம்மன்
அம்பது , எம்பது , நூறு
நூத்தம்பது , இரநூறு
நாலு மணிக்கணக்கா
ஏலம் கூவினா இரநூறு
கூவு கூலி என்றது
வேளான் அம்மன்
ஆறு மணிக்கு சேத்துல இறங்கி
ஆறு மணி நேர நாட்டு நட்டா
நூற்றைம்பது நடவு கூலி என்றது
தன் தலைமுறை ஒளிர்வுக்காக
ஓடாய் தேய்ந்த
அம்மன்களை
நாலு கூடை மண் அள்ளி
நாலு மணி உக்கார்ந்திருந்தா
உனக்கு என்பது எனக்கு இருவது
கூட்டு சேர்த்தது
கையூட்டு
ஆட்சியதிகார
அதிகாரவர்க்கம்.






சனி, 22 ஏப்ரல், 2017

தலைப்பில்லா கவிதைகள்.

ஒரு கோட்டின் மீது
பயணித்து கொண்டு இருக்கிறது
விழித்திருக்கும் மனம்
முடிவில்லா கோடாய்...
நிற்கும் போதும்
நடக்கும் போதும்
ஒவ்வொரு அசைவின் போதும்
என்னை விட்டு
முன்போ பின்போ
வலதோ  இடதோ
இறந்தக்காலத்திலோ
எதிர்க்காலத்திலோ
நின்று கொண்டிருக்கிறது....
எப்போதும் என்னுடன்
இருப்பதும் இல்லை
இருக்கப்போவதும் இல்லை.

சனி, 15 ஏப்ரல், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 14.

நான் எப்பொழுதும்
பேருந்து காத்திருப்புக்காக
அமரும் சிமெண்ட் தரையில்
எறும்பு கூட்டம் ஒன்று
அதை என் விரலை குவித்து
தட்டி விட்டேன் புல்தரையில்
இப்போது தான் பார்க்கிறேன்
வெண்மையான உணவு உருண்டை
அந்த தரையில் கிடைப்பதை
வேறொரு இடத்தில் அமர்ந்தேன்
அதை தட்டி விடாமல்
அந்த கூட்டம் அதை தேடி
வரும் என்ற நம்பிக்கையுடன் .

வியாழன், 6 ஏப்ரல், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 13.

நான்கு கால்களுடைய
மிருகமாக படைக்கப்பட்டது
முதுகெலும்பை நேராக்கி
முன்னங்கால்களை கைகளாக்கி
பரிணாமம் கண்டது.
கைகள் கிடைக்கப் பெற்றதும்
தான் வாழ்ந்த காட்டை
அழித்து ருசித்து நகர்ந்தது
பதுங்கி கிடந்த மலைகளை
அழித்து பாதுகாப்பை தேடியது
பூவுலகை பிளந்தெரித்து
இருளை வெளிச்சமாக்கியும்
வெம்மையை குளிராக்கியும்
அறிவுதிறனால் அனுபவித்தது
பூமியை துளையிட்டு
நகர்ந்து பறந்து பேரின்பம் கொண்டது
இறுதியில்
தனக்காக படைக்கப்பட்டதை
வெப்பக்கிரகத்திடம்
பரிசளித்துவிட்டு
பரிதவிக்கிறது.