சனி, 22 அக்டோபர், 2016

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 8.

மரங்களை உற்று கவனியுங்கள்
மரக்கிளையில் அமர்ந்து
அதனை மனிதர்கள்
வெட்டிக்கொண்டிருக்கிறார்கள்
எளிதாக விரைவாக
வெட்டுவதே இலக்கு
அவர்கள் நம்புகிறார்கள்
மரத்தின் கீழ் வலை
இழுத்து  கட்டப்பட்டிருப்பதாய்
யார்
நான், நீ
நாங்கள் , நீங்கள்
அவன் , அவள்
இவர்கள் , அவர்கள்
வெறொருவருமில்லை.



சனி, 27 ஆகஸ்ட், 2016

தலைப்பில்லா கவிதைகள். கவிதை. 7.

என் அன்னையின் கைகளின்
அரவணைப்பில் நின்ற போதும்
என் தந்தையின் தோளில்
அமர்ந்து  பார்த்த போதும்
உறவுகளிடமும்
நண்பர்களிடமும்               ஒளிந்து கொண்ட போதும்
தெருவின் முனையில்   ஒதுங்கி  நிற்கும் போதும்
கடலின் அலையில் கால்
நனைத்து நிற்கும்  போதும்
மனைவியின் அன்பில் அயர்ந்து தூங்கும் போதும்
அது என்னை பின்
தொடர்வதாய்  உணர்கிறேன்
பயம் அறுத்து அதன் மீது
ஏறி அமர்கிறேன்
என்னை சுமந்து கொண்டு
அதன் போக்கில்  ஓடுகிறது
மீண்டு விடு என்று
மனம் துடிக்க இறங்கி
என் குழந்தையின் பின்னால்
அமர்ந்து கொள்கிறேன்
அது என்னை விட்டு
சென்றுவிட்டதாய் எண்ணி உற்று நோக்குகிறேன்
பதுங்கி நின்று என்னையே பார்த்து கொண்டிருக்கிறது.


சனி, 16 ஜூலை, 2016

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 6.

ஒரு பூனையின்
செயல்பாட்டுடனே
மனம் வாழ்கிறது
பொந்தில் புகுந்து கொள்ளும்
எலியை துரத்தியே
களைக்கிறது பூனை
எலியின் ருசியை
எப்போதேனும்
ருசித்து விடமுடியும்
என்ற ஏக்கத்தில் .

வியாழன், 7 ஜூலை, 2016

தலைப்பில்லா கவிதைகள் . கவிதை 5.

நான்
நிற்கும் போதும்
நடக்கும் போதும்
என்னுடைய
ஒவ்வொரு அசைவின் போதும்
அது என்னை விட்டு
முன்போ பின்போ
வலதோ  இடதோ
இறந்தக்காலத்திலோ
எதிர்க்காலத்திலோ
நின்று கொண்டிருக்கிறது எப்போதும் என்னுடன் இருப்பதும் இல்லை
இருக்கப்போவதும் இல்லை.